பாஜகவின் டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்தை விமர்சித்த தவெக விஜய் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வைத்துள்ள விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.1000 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து நேற்று டாஸ்மாக்கை முற்றுகை செய்து போராட்டம் நடத்த பாஜக முயன்றது. அப்போது அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர் பலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த போராட்டத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட தவெக விஜய், மத்தியில் அரசு அதிகாரத்தில் இருந்து கொண்டு மாநில அரசின் ஊழல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்காமல், போராட்டம் நடத்துகிறது பாஜக என விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்த அண்ணாமலை “ஒரு தேர்தலை கூட சந்திக்காமல் எங்கோ அமர்ந்து கொண்டு அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டு அரசியல் செய்து வருகிறார். நடிகைகளின் இடுப்பைக் கிள்ளிக் கொண்டு, ஆடிக் கொண்டு அரசியல் செய்பவர் அவர். 30 வயதிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியதுதானே. 50 வயதில் புத்தர் எழுப்பிவிட்டு அரசியலில் இணைய சொன்னாரா?
வொர்க் ஃப்ரம் ஹோமில் அரசியல் செய்பவர் விஜய். நாங்கள் களத்தில் இறங்கி போராடுகிறோம். விஜய் யாருடைய பி டீம்? நாடகம் யார் செய்கிறார்கள்? பாஜகவா? விஜய்யா?
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தொடங்கப்பட்ட ரகசிய திட்டம்தான் தமிழக வெற்றிக் கழகம். தவெக தான் திமுகவின் பி டீம். இதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
நீங்கள் சினிமாவில் மது அருந்தி, சிகரெட் புகை எல்லாம் செய்துவிட்டு டாஸ்மாக் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது? ஒரு குல்லாவை போட்டு ஒருநாள் இப்தார் வைத்தால் எல்லாம் வந்துவிடுமா? சிறுவர்கள் போன்று பாஜகவிடம் வந்து சண்டை போடக் கூடாது” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K