பிரபாகரனின் கோவிலை இடித்து தள்ளிய தமிழக காவல்துறை

Webdunia
சனி, 6 ஜூன் 2015 (12:45 IST)
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு கட்டப்பட்டிருந்த கோவிலை தமிழக காவல்துறை இடித்துத் தள்ளியது.
 
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தினர் தங்களது ஊர் காவல் தெய்வமாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை வழிபடுவதற்காக கோவில் ஒன்றை சமீபத்தில் குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.
 

 
அதில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு குதிரைகளில் ஒன்றில் சுபாஷ் சந்திரபோஸ் குதிரையை பிடித்த படியும், மற்றொரு குதிரையை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கி ஏந்திய படி பிடித்திருப்பது போலவும் சிலையை வடிவமைத்திருந்தனர்.
 
இது சமீபத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில், அங்கிருந்த பிரபாகரன் சிலையை காவல் துறையினர் அகற்றியுள்ளனர். மேலும், சிலையை வடிவமைத்தவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.