மதுரை போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை தல்லாகுளத்தில் முன்ஜாமீனில் கையெழுத்திட வந்த இளங்கோவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இளங்கோவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர் மீது முட்டை, செருப்பு போன்றவைகளை வீசினர்.
இது குறித்து, மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் முன்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தேன். ஆனால், எனக்கு எதிராக அதிமுகவினர் திட்டமிட்டு போராட்டம் நடத்துகின்றனர். இதை போலீசாரும் வேடிக்கை பார்க்கின்றனர்.
மேலும், நான் கையெழுத்திடுவதை திட்டமிட்டு, போலீசார் தாமதப்படுத்தினர். இது முறையான செயல் அல்ல. காவல் நிலையத்தில் நான், கையெழுத்து போடும் பாேது, உட்கார நாற்காலி தரவில்லை. இது குறித்து எனது வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் கூறுவேன்.
மதுரை விமான நிலையத்தில் எனக்கு பாதுகாப்பு அளித்த போலீசார், காவல் நிலையம் வருவதற்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.