காதலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெற்றோர்: கை கொடுத்த நீதிமன்றம்

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (13:56 IST)
கேரள மாநிலத்தில் இரு வேறு மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அவர்களின் திருமணத்திற்கு  கேரள உயர் நீதிமன்றம் உதவி செய்துள்ளது.  
 
கேரளாவில், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்தனர்.
 
இந்த காதல் ஜோடியின் திருமணத்திற்கு, இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
 
இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் பதிவு திருமணம் செய்து கொள்ள பெயர்களை பதிவு செய்தனர்.
 
இந்நிலையில், அந்தப் பெண்ணின் தந்தை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, காதல் ஜோடி நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
 
நீதிமன்றத்தில், இரு தரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதிகள், இளம் காதல் ஜோடியினர் திருமணம் செய்ய வசதியாக, அவர்கள் பதிவு செய்திருந்த படியாட்கா பகுதி பதிவாளரை எர்ணாக்குளம் வந்து, அவர்களது திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
 
அத்துடன், காதல் ஜோடிக்கு  காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.