'அநீதி செய்தவர்களை கொல்லுங்கள்' - ராஜ் தாக்கரேவின் பேச்சால் சர்ச்சை

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (17:39 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நவ நிர்மான்  கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, விவசாயிகள் மத்தியில் பேசுகையில். ' உங்களுக்கு அநீதி செய்தவர்களை கொல்லுங்கள் என பேசியது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மகாராஷ்டிர  மாநிலம் யாவாத்மால் பகுதியில் அவரது கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நவ நிர்மான்  கட்சி தலைவர் ராஜ் தாக்கரே விவசாயிகளிடம் பேசுகையில், நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். அது உங்களின் எந்த பிரச்சனையையும் தீர்க்க போவதில்லை. அப்படியே உங்களுக்கு தற்கொலை செய்யும் எண்ணமிருந்தால், முதலில் உங்களுக்கு அநீதி செய்தவர்களை கொல்லுங்கள் என்று பேசினார். 
 
மேலும், தேர்தல்கள் அனைத்தும் சாலைகள், வேலைவாய்ப்பு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நடைபெறுகின்றன. ஆனால், இன்று வரை இந்த அடிப்படை தேவைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. கிராமங்களில் கூட  மதுபானங்கள் கிடைக்கின்றன. ஆனால், குடிநீர் கிடைப்பதில்லை எனவும் பேசினார். 
 
ராஜ் தாக்கரேவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.