கோவில் திருவிழாவில் வாலிபர் குத்தி படுகொலை

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2015 (11:53 IST)
கேரளாவில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் திடீரென வன்முறை வெடித்ததில் மகேஷ் என்ற வாலிபர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
கேரளாவை சேர்ந்த ஒரு  கூலித்தொழிலாளி மகேஷ். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து  மலம்புலாவிலுள்ள ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். அப்போது கோவிலுள் திடீரென வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. உடனே சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர்.
 
கோவிலில் இருந்த அனைவரும் செய்வதறியாமல் ஓட்டம் பிடித்தனர். இதில் மகேஷை திடீரென காணவில்லை. உடனே அவரது நண்பர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மகேஷ் ஒரு வயலில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே மகேஷை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் மகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை மற்றும் வன்முறை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.