முன்னாள் மந்திரி சுட்டுக் கொலை; அடுத்த குறி சல்மான் கான்? - அச்சுறுத்தும் பிஷ்னோய் கும்பல்!

Prasanth Karthick
திங்கள், 14 அக்டோபர் 2024 (12:14 IST)

மும்பையில் முன்னாள் மந்திரி பாபா சித்திக் கொல்லப்பட்ட நிலையில் சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

மகாராஷ்டிராவில் துணை முதல்வரான அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமாக இருந்தவர் பாபா சித்திக். மும்பையில் கோல்கேட் மைதானத்திற்கு அருகே உள்ள தனது மகனின் அலுவலகத்திற்கு வெளியே நேற்று மாலை பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரில் ஹரியானாவை சேர்ந்த பல்ஜித் சிங், உத்தர பிரதேசத்தை சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபரான சிவகுமார் கவுதம் என்பவரும், மற்றொரு நபரும் தப்பி தலைமறைவான நிலையில் போலீஸார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

ALSO READ: ட்ரம்ப் பரப்புரைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்! அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!
 

பிடிப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பிரபல ரவுடி கும்பலான பிஷ்னோய் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் பிஷ்னோய் கும்பல் பெயரிலான சமூக வலைதள கணக்கு ஒன்றில் இந்த கொலையை தாங்கள்தான் செய்ததாக பதிவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருந்து வந்த நிலையில், தற்போது முன்னாள் மந்திரியின் கொலையிலும் தொடர்பு இருப்பதால், சல்மான் கான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மறைந்த பாபா சித்திக்கிற்கு சல்மான்கானுடன் நட்புறவு இருந்ததும், பாபா சித்திக் படுகொலைக்கு பின் அவரது வீட்டிற்கு சல்மான்கான் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்