ஏ.டி.எம்-ல் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்

Webdunia
சனி, 1 நவம்பர் 2014 (09:12 IST)
வங்கிகணக்கில் இருந்து பணம் எடுக்க 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்மைப் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத்  ஆகிய பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
 
இன்று முதல் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுக்க முடியும். பணம் இருப்பு விவரம் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளும் இதில் அடங்கும். 
 
இதே போன்று மற்ற வங்கி ஏ.டி.எம்களில் இருந்து 3 முறை கட்டணம் இல்லாமல்  பணம் எடுக்கலாம். கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம் மூலம் 5 முறைக்கு மேலும், மற்ற வங்கி ஏ.டி.எம்  மூலம் 3 முறைக்கு மேலும் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கி இருப்பிலிருந்து ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.
 
ஆனால் இந்த 6 பெருநகரங்களை தவிர்த்த மற்ற நகரங்களில் உள்ள ஏ.டி.எம் களில் ஏற்கனவே உள்ளபடி வாடிக்கையாளர்கள் சேவையை பெறலாம்.
 
மற்ற நகரங்களில், கணக்கு வைத்திருக்கும் ஏ.டி.எம்களில் இருந்து முற்றிலும் இலவசமாகப் பணம் எடுத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.