திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

Senthil Velan

திங்கள், 20 மே 2024 (18:23 IST)
பெங்களூருவை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், திரவ நைட்ரஜன் கொண்ட பான் பீடாவை சாப்பிட்டதால், வயிற்றில் ஓட்டை விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த உறவினர்களுக்கு, நிகழ்ச்சியில் திரவ நைட்ரஜன் கொண்ட பான் பீடா வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி ருசித்துள்ளனர். 
 
அப்போது இதன் ஆபத்தை உணராத 12 வயது சிறுமி, திரவ நைட்ரஜன் கலந்த பான் பீடா வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். இதனால் பெற்றோர் அவருக்கு அந்த பான் பீடாவை வாங்கி கொடுத்தனர். இதை சாப்பிட்ட சில நாட்களிலேயே அந்த சிறுமிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள நாராயணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, திரவ நைட்ரஜன் காரணமாக அவரது வயிற்றில் உள்ள திசுக்கள் சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. எண்டோஸ்கோபி மூலம் வயிற்றுக்குள் கேமராவை செலுத்தி பார்த்தபோது, சுமார் 20 சதுர சென்டிமீட்டர் அளவிற்கு திசுக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

ALSO READ: சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி..! கஞ்சா வழக்கில் நீதிமன்றம் உத்தரவு..!!
 
இதனை மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாது என்பதால், அந்த பகுதியை வெட்டி எடுப்பது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட திசுக்கள் மொத்தமாக வெட்டி எடுக்கப்பட்டதால், சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த பகுதியில் தையல் போடப்பட்டுள்ளது. தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்