இளம்பெண்ணை பட்டப்பகலில் இழுத்து சென்று பலாத்காரம் செய்த நபர் : பரபரப்பு வீடியோ

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2016 (12:47 IST)
பட்டப்பகலில், ஒரு இளம்பெண்ணை நடு ரோட்டில் ஒரு இளைஞர் இழுத்து சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பஞ்சாப் மாநிலம், முக்த்சர் நகரில் கடந்த மாதம் 25ஆம் தேதி, ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தலித் இளம்பெண்ணை, குர்ஜிந்தர் என்ற இளைஞர் நடுரோட்டில் தரதரவென்று இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இதில் என்ன கொடுமையென்றால், அந்த பெண் கூச்சல் போட்டும், உதவிக்கு அழைத்தும் யாருமே உதவவில்லை. இந்த பெண்ணை இழுத்துச் சென்ற நபர், ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்து ஒரு நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
மறுநாள் அந்த பெண்ணை விடுதலை செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணும், அவரின் தந்தையும் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அவரின் புகாரை ஏற்கவில்லை. அதன்பின் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனால் வேறு வழியின்று 5 நாட்களுக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
அந்த வாலிபர் தற்போது காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
 
அவர் அந்த பெண்ணை இழுத்துச் சென்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வாலிபரும், அந்த பெண்ணும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

 

நன்றி : NDTV