பாரீஸ் நகரத்தில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த என்ஜினியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன்(26). இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக நள்ளிரவு நேரத்தில் வாகிரார்டு மெட்ரோ ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது யாரோ சிலர் அவரின் கழுத்து, நெஞ்சு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியுள்ளனர்.
அவர் அந்த நிலையிலேயே நண்பர் வீட்டுக்கு சென்று, அழைப்பு மணியை அடித்துவிட்டு அங்கேயே சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்த அவரின் நண்பர், மணிமாறன் நிலை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக போலீசார் விரைந்து வந்து அவர் உடலை மீட்டனர். ரயில் நிலையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சில கொள்ளையர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த தகவல் கேள்விபட்டு, தமிழகத்தில் வசிக்கும் மணிமாறனின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகனை பறிகொடுத்து அவர்கள் மன வேதனையில் வாடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.