இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் நடந்துவரும் நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சவுதி அரேபியாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "சகோதர நாடான ஈரானின் சமீபத்திய நிலைமையை கவனித்து வருகிறோம். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் கவலையை அளிக்கிறது," என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், பதற்றத்தை தவிர்க்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய சூழ்நிலையில் அரசியல் ரீதியிலான தீர்வை காண வேண்டும் என்றும், போரை தவிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் சவுதி அரேபியா கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகள் ஒன்றிணைவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் பதற்றம் மத்திய கிழக்கு அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.