அமெரிக்கா, ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை அழித்துவிட்டதாக கூறிய நிலையில், ஈரானின் அணு ஆயுத அமைப்புகளை முழுமையாக அமெரிக்கா அழிக்கவில்லை என உளவுத்துறை தெரிவித்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் கடந்த 12 நாட்களாக நடந்த நிலையில், சமீபத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு முந்தைய நாளில், ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளவாடங்களை விமானம் மூலம் குண்டுகளை போட்டு அழித்ததாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
ஆனால், ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும், இந்த தாக்குதலால் ஈரானுக்கு சில பின்னடைவுகள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் பெரும்பாலும் அப்படியே இருப்பதாகவும், நிலத்திற்கு கீழே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நிலத்தில் ஆழமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் அப்படியே உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அறிவிப்புக்கும் இந்த உளவுத்துறை அறிக்கைக்கும் பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், டிரம்ப் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தேசத்துரோகம் என்றும் டிரம்ப் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.