ஈரான், 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மறைத்து வைத்துள்ளதாகவும், இதன் மூலம் 10 அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்றும் அமெரிக்கா அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்ததுடன், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது அனைவரும் அறிந்ததே.
இந்த சூழலில், அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈரான் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சேமித்து வைத்திருந்தது என்றும், ஆனால் அது தற்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதமடைந்திருந்தாலும், அந்த யுரேனியம் சேதமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் 10 அணு ஆயுதங்கள் தயாரிக்கலாம் என்றும் அவர் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். அமெரிக்கா தாக்குவதற்கு முன்பே, 16 டிரக்குகளில் அந்த யுரேனியத்தை ஈரான் வேறு இடத்திற்கு மாற்றியிருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.