உலகமே எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் ஹிலாரியும், டிரம்பும் பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். பல்வேறு கருத்துக்கணிப்புகள் வந்தவாறு உள்ளன. ஒவ்வொன்றும் மாறி மாறி இருவருக்கும் சாதகமாக உள்ளன.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் வைத்து மிகவும் பரபரப்பாக இருந்தது இந்த தேர்தல் பிரச்சாரக்களம். இந்நிலையில் யார் அடுத்த அதிபர் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் தொடங்கியுள்ளது.
நியூ டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற கிராமத்தில் நள்ளிரவே தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த கிராமத்தில் மொத்தம் 12 பேர் மட்டுமே வசிக்கின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு இந்த கிராமத்தில் வாக்குப்பதிவு ஆரம்பித்து அதன் முடிவையும் அறிவித்துள்ளனர்.
12 பேர் கொண்ட இந்த கிராமத்தில் 8 பேர் வாக்களித்தனர். அதில் 4 பேர் ஹிலாரிக்கு வாக்களித்து அவர் முதலிடத்தில் உள்ளார். 2 இரண்டு பேர் டிரம்புக்கு வாக்களித்து அவர் இரண்டாம் இடத்திலும் ஒரு வாக்கு பெற்ற கேரி ஜான்ஸன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
கடந்த 2000, 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்த நியூ டிக்ஸ்வில்லியில் வெற்றி பெற்றவர்கள் தான் அமெரிக்காவின் அதிபர் ஆகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.