போலியோ மருந்து கொடுப்பதற்காக போர் நிறுத்தம்! - ஒப்புதல் கொடுத்த ஹமாஸ் - இஸ்ரேல்!

Prasanth Karthick

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (11:24 IST)

காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக உலக சுகாதார அமைப்பின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் - இஸ்ரேல் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காசாவில் வான்வழி, தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன் மக்கள் காசாவில் பலியாகியுள்ளனர்.

 

இந்த போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்நிலையில் காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பதற்காக இடைக்கால போர் நிறுத்தம் செய்யும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டது.
 

ALSO READ: பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை.! குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - வெறிச்சோடிய துறைமுகங்கள்.!!
 

இதற்கு இஸ்ரேலும், ஹமாஸும் சம்மதம் தெரிவித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 3 நாட்களுக்கு தினசரி காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை போர் நிறுத்திவைக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பயன்படுத்தி குழந்தைகளுக்கு முதற் சுற்று போலியோ மருந்து வழங்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டு வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்