காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பிரதமர்கள் மற்றும் முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவரது கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக்குரிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு, 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும். இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவின் நகல்களை கிழித்து அமித்ஷாவின் மீது வீசியெறிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு மாறாக, சசிதரூர் இந்த மசோதாவை ஆதரித்துள்ளார். "ஒருவர் 30 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டால் அமைச்சராக தொடர முடியுமா? இது பொதுஅறிவு சார்ந்த விஷயம். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.