தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித், கமல் என பலருடனும் படம் நடித்த இவர், பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கும் ஜோடியாக நடித்தார். தற்போது வயதாகியிருக்கும் சிம்ரன் பல்வேறு துணைக் கதாப்பாத்திரங்களில் மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தில் சில நிமிட கேமியோ காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை சிம்ரன் “சமீபத்தில் ஒரு நடிகைக்கு உங்களை அந்த கதாப்பாத்திரத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன் என மேசேஜ் அனுப்பினேன். அதற்கு அவர் ஆண்ட்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விட இது எவ்வளவோ மேல் என்று பதில் அளித்தார். மிகவும் பொறுப்பற்ற பதில் அது. டப்பா கதாப்பாத்திடங்களில் நடிப்பதை விட, ஆண்ட்டி, அம்மா போன்ற கேரக்டரில் நடிப்பது எவ்வளவோ சிறந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலேயே நான் அம்மாவாக நடித்திருந்தேன். நாம் என்ன செய்கிறோம் என்பதில் நமக்கு முதலில் நம்பிக்கை தேவை எனக் கூறியுள்ளார்.
சிம்ரனின் அந்த பேச்சில் அவர் குறிப்பிட்டிருந்த நடிகை ஜோதிகாதான் என கிசுகிசுக்கப்பட்டு ரசிகர்கள் ஜோதிகாவை விமர்சிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் இப்போது சிம்ரன் அது சம்மந்தமாக மேலும் பேசியுள்ளார். அதில் ”நான் அன்று பேசியது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பேசப்பட்டதில்லை. அந்த நடிகை பேசியது உண்மையிலேயே என்னைக் காயப்படுத்தியது. அந்த நடிகையின் கருத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் பேசிய வார்த்தைகள் தவறானது. அந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நடிகையிடம் இருந்து வருத்தம் தெரிவித்து மெஸேஜ் வந்தது. அதில் “என்னைக் காயப்படுத்துவதற்காக அப்படிக் கூறவில்லை” என்று அவர் அப்படி தெரிவித்திருந்தார்.” எனக் கூறி விளக்கமளித்துள்ளார்.