தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.
ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கி வரும் அவர் அறிவுரை செய்யும் விதமாக பல பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேன் இந்தியா சினிமா கலாச்சாரம் அசிங்கமானது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “பேன் இந்தியா என்ற அசிங்கமானக் கலாச்சாரத்தால் நல்ல சினிமாவுக்கான வரையறைக் குறைந்துவிட்டது. கடைசியாக எப்போது நல்ல படம் பார்த்தோம் என்பதே நினைவில் இல்லை. 100 நாட்கள் ஓடிக்கொண்டிருந்த படங்கள் எல்லாம் இப்போது 3 நாட்கள் மட்டுமே ஓடுகின்றன. ஒரு படத்தைக் குதறி அந்த இயக்குனரின் வாழ்க்கையையே காலி பண்ணி விடுகிறார்கள்” எனக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.