விஜய் ஆண்டனி மகள் தற்கொலை விவகாரம்… ஊடகங்களைக் கண்டித்த பிரபல தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு!

வியாழன், 21 செப்டம்பர் 2023 (06:53 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது சோகமான முடிவுக்கு திரைத்துறை கலைஞர்களும், ரசிகர்களும் இரங்கல் சமூகவலைதளங்களில் மற்றும் நேரடியாக அவர் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்தனர்.

இந்த தற்கொலை விவகாரத்தில் சில ஊடகங்கள் எல்லை மீறி தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் சில வெளியிடக் கூடாத தகவல்களை வெளியிட்டனர். மேலும் விஜய் ஆண்டனியின் வீட்டை சூழ்ந்துகொண்டு லைவ் கவரேஜ் செய்து வெளியிட்டனர். இதைப் பலரும் கண்டித்த நிலையில் இப்போது பிரபல தயாரிப்பாளர் எஸ் ஆர் பிர்பு முகநூல் மூலமாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில் “பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லவை கெட்டவை எதுவாயினும் ஊடகங்களே அவற்றை முக்கியப்படுத்துகின்றன. ஆயினும் ஒருவர் வாழ்வில் துக்க விசயங்கள் நடக்கும்பொழுது, அவை எவ்வாறு கையாளப்படவேண்டுமென்ற அடிப்படை அறிவும், கடமையும் ஊடகவியலாளர்களுக்கு மிகமுக்கியமான பொறுப்பாகும். சமீபத்திய இரு துயர சம்பவங்களில் சில ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் முற்றிலும் தவறான, அறமற்ற செயல். அதற்காக எனது வன்மையான கண்டனத்தையும், இவ்வாறான போக்கை இனியாவது தவிர்க்குமாறு எனது வேண்டுகோளையும் இங்கே பதிவு செய்கிறேன்!” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்