மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது பைசன் திரைப்படம். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தில் இருந்து வெளியானப் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் பற்றியும் படக்குழுவினர் பற்றியும் பேசினர். அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பா ரஞ்சித், மாரி செல்வராஜுடனான முதல் சந்திப்புக் குறித்து பேசியுள்ளார்.
அதில் “மாரி செல்வராஜை முதலில் இயக்குனர் ராம் சார்தான் என்னிடம் அனுப்பி வைத்தார். என்னுடைய மெட்ராஸ் படத்தில் அவனுக்கு விமர்சனம் இருப்பதாக சொல்லிதான் அனுப்பி வைத்தார். அப்படிதான் நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்படிதான் அவனுடைய பரியேறும் பெருமாள் படத்தின் தயாரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இப்போது பைசனில் அவனுடைய உலகம் விரிவடைந்துள்ளது. அந்த படத்தின் திரைமொழி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவனுக்காக நான் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். மாரி செல்வராஜ், நீ ஒரு கலைஞன்” எனப் பாராட்டியுள்ளார்.