தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். கடைசியாக அவர் இயக்கிய கூலி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் கூலி படத்தின் ரிலீஸூக்குப் பிறகு முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் அனிருத்துக்கும் அவருக்கும் உள்ள நெருக்கம் குறித்துப் பேசியுள்ளார். அதில் “எதிர்காலத்தில் என்னால் அனிருத் இல்லாமல் படம் எடுக்க முடியாது. நாங்கள் இருவரும் ஓய்வு பெறும் வரை இணைந்து பணியாற்றுவோம்” எனக் கூறியுள்ளார்.