பாலிவுட் சினிமாவின் சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்தின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் சமீபத்தைய ஆண்டுகளில் பாலிவுட்டைத் தவிர்த்து கங்கனா தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். தலைவி படம் மூலம் தமிழில் ரி எண்ட்ரி கொடுத்த அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை.
அதன் பின்னர் அவரே இயக்கி நடித்து, தயாரித்த எமர்ஜென்ஸி படம் ரிலீஸாகி அதுவும் தோல்விப் படமாக அமைந்தது. அவரது சினிமா வாழ்க்கை தேய்முகமாக இருந்தாலும் அரசியலில் கால்பதித்து நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் சினிமாவுக்கு ஒரு தற்காலிக இடைவெளிக் கொடுத்திருந்தார்.
அதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் மாதவனுடன் இணைந்து சர்க்கிள் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.