உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி உள்ளதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். Valiant எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. பல அரசியல் தலைவர்கள் நேரை சந்தித்து வாழ்த்தினர். மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார்.
இதையடுத்து அந்த சிம்ஃபொனி இசைக் கோர்வை சென்னையில் கடந்த மாதம் அரங்கேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று தீபாவளி நாளில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இளையராஜா “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இன்று என் அம்மாவுடைய நினைவு நாள். அவரை வழிபட பன்னைபுரம் செல்கிறேன். அது முடிந்தவுடன் என்னுடைய இரண்டாவது சிம்ஃபொனிக்கான எழுத்துப் பணிகளை இன்று தொடங்கவுள்ளேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.