96 படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரதீப்பா?... நாளுக்கு நாள் பொய்ச் செய்திகள் அதிகமாகின்றன – இயக்குனர் பிரேம்குமார் ஆதங்கம்!

vinoth

வியாழன், 29 மே 2025 (13:12 IST)
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.

அவரின்  நேர்காணல் ஒன்றில்  “என்னுடைய அடுத்த படம் என்னவென்பது இப்போது வரை முடிவாகவில்லை. 96 படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வைத்துள்ளேன். முதலில் அதை படமாக எடுக்க வேண்டாம் என நினைத்தேன். ஆனால் எழுதி முடித்ததும் அதை படமாக பார்க்கும் ஆசை எனக்கே வந்துவிட்டது” எனக் கூறியிருந்தார். இரண்டாம் பாகத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் பிலிம் தயாரிக்க விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களாக சமூகவலைதளங்களில் இந்த படத்தில் நடிக்க விஜய்ச் சேதுபதி ஆர்வம் காட்டவில்லை என்றும் அவருக்குப் பதிலாக ப்ரதீப் ரங்கநாதனிடம் இயக்குனர் பிரேம் குமார் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் பரவின. இதை இயக்குனர் பிரேம்குமார் மறுத்துள்ளார்.

மேலும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. '96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் '96-2 எடுக்க முடியும். நடிகர் திரு பிரதீப் ரங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு.  அதற்கும் '96-2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.  நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்