‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

vinoth

சனி, 14 ஜூன் 2025 (10:39 IST)
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக ’டூரிஸ்ட் பேமிலி’ படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இந்த படம் வெளியாகி திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. தற்போது ஓடிடியில் வெளியாகி ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார்.

இந்நிலையில் அபிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு கவனம் பெற்றுள்ளது. அதில் “நான் ஆட்டோவில் என்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஆட்டோ ஓட்டுனர் முகை மழை பாடலை ஓடவிட்டார். அதைக் கேட்டு நான் அவரிடம் ‘இந்த படம் உங்களுக்குப் பிடித்ததா?’ எனக் கேட்டேன்.
அந்த அண்ணன் தயக்கமில்லாமல் “திரையரங்கில் மூன்று முறைப் பார்த்தேன். படத்தில் சசிகுமார் கதாபாத்திரம் என் அப்பாவை நினைவுபடுத்தியது. என் அப்பா இப்போது உயிரோடு இல்லை. என் கையைப் பாருங்கள். அந்த படத்தைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது” என சொன்னார்.

அப்போது நான்தான் இந்த படத்தின் இயக்குனர் என்றதும் மகிழ்ச்சியடைந்து அன்பை வெளிப்படுத்தினார். நமது படைப்பினால் ஒருவர் சிரிக்கிறார், மனம் ஆறுதல் அடைகிறார் என்பது தெரியவரும் போது ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்