ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்யவேண்டும்.. சிறுபான்மை மக்கள் நல கட்சி வழக்கு!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:17 IST)
இயக்குனர் மோகன் இயக்கியுள்ள ருத்ரதாண்டவம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திரௌபதி படத்தின் மூலமாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் அந்த படம் சாதிய மேலாதிக்கம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார்.

”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. திரௌபதி படத்தில் தலித் மக்களின் மீதான் வன்மம் வெளிப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த படத்தில் கிறிஸ்துவ மதத்தை விமர்சனம் செய்யும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதை டிரெய்லர் காட்டுகிறது.

இந்நிலையில் படத்தைத் தடை செய்ய வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய செயலாளர் சாம் யேசுதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தில் சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் இதற்கு பதிலளிக்கவேண்டும் என நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்