இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட வினோத் காம்ப்ளி, உடல்நல குறைபாடுகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய பால்ய நண்பரான காம்ப்ளி, இந்தியாவுக்காக 104 ஒருநாள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.
இந்த நிலையில் சச்சினுடன் விளையாடிய காலத்தில், ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை காம்ப்ளி பகிர்ந்ந்து கொண்டார். அதாவது மற்ற கிரிக்கெட் வீரர்கள் பகுதி நேர வேலைக்கு சென்றபோது, காம்ப்ளிக்கும் அதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தபோது அதை மறுத்துவிட்டார்.
"ஒரு போட்டிக்கு 25 பவுண்டுகள் மட்டுமே சம்பாதிக்கிறீர்கள், ஏன் பார்ட் டைம் வேலை செய்ய கூடாது?" என்று ஒரு நண்பர் கேட்டபோது, காம்ப்ளி சற்றும் தயங்காமல், "நானும் சச்சினும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி பணம் சம்பாதிப்போம். பகுதி நேர வேலைகள் செய்து என் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை," என்று நம்பிக்கையுடன் பதிலளித்தாராம். இந்த சம்பவம், இளம் காம்ப்ளியின் அசாதாரண நம்பிக்கையை காட்டுகிறது.
காம்ப்ளியின் மற்றொரு நண்பர் நாசா ஹுசைன், அவரது அபாரமான திறமையை பற்றி கூறுகையில், "அவர் பந்தை அவ்வளவு பலமாக அடிக்கும் ஒருவரை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. ஓடி வந்து முதல் பந்தையே சிக்ஸருக்கு அடிப்பார். இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்கள் அடித்தார். அவர் மட்டும் கொஞ்சம் சுதாரித்து இருந்தால் இன்று அவர் ஒரு கோடீஸ்வரராக இருந்திருப்பார்," என்று வியந்து கூறினார்.