இது வெறும் விளையாட்டுதான் - கடுப்பான சானியா மிர்ஸாவின் நச் டிவிட்

புதன், 12 ஜூன் 2019 (15:08 IST)
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பற்றி இருநாட்டு ஊடகங்களும் மிகவும் மலிவான விளம்பரங்களை வெளியிடுவதை முன்னிறுத்தி சானியா மிர்சா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் உலக கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 16 அன்று மோத இருக்கின்றன. பொதுவாகவே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் என்றாலே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அளவிலேயே இரண்டு தரப்பு ரசிகர்களின் மனநிலையும் இருக்கும். அது மட்டுமல்லாமல் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் மோதி கொண்ட ஒரு உலக கோப்பையில் கூட பாகிஸ்தான் இந்தியாவை வென்றது கிடையாது. இந்நிலையில் நடக்கவிருக்கும் போட்டிக்கு விளம்பரம் வெளியிட்ட பாகிஸ்தான் அபிநந்தனை கிண்டல் செய்திருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்தியாவில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் பாகிஸ்தானில் ஜாஸ் டிவியும் மாறி எதிரணிகளைத் தாக்குவது போல விளம்பரங்களை வெளியிடுகின்றன. இதனால் இரு நாட்டு ரசிகர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இப்படி மலிவான விளம்பரங்களை வெளியிடும் ஊடகங்கள் மீது கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது டிவிட்டரில் ‘இரு நாட்டுத் தரப்பிலும் இருந்தும் சங்கடமான விளம்பரங்கள் வெளியாகின்றன. விளையாட்டை இது போல விளம்பரப்படுத்த தேவையில்லை. அதுவும் இவ்வளவு கேவலமாக… போதுமான அளவுக்கு கவன ஈர்ப்பு உள்ளது. இது வெறும் விளையாட்டுதான். நீங்கள் அதற்கு மேல் நினைத்தால்… வாழ்க்கையைத் தேடுங்கள்’ எனக் காட்டமாக பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்