உலக சாம்பியனை கதிகலங்க வைத்த இந்திய வீரர்: அமெரிக்க ஓபன் டென்னிஸ்

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (12:31 IST)
பிரபலமான டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் ஆடவர் ஒற்றை பிரிவுக்கான இன்றைய ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரருடன் இந்திய வீரர் சுமித் நகல் மோதினார்.

என்னதான் இந்தியா கிரிக்கெட்டில் மற்ற நாடுகளை புரட்டியெடுத்து வந்தாலும் மற்ற விளையாட்டுகளில் பெரிதாய சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் நடந்து வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹரியானாவை சேர்ந்த சுமித் நகல் கலந்து கொண்டுள்ளார். அவரை எதிர்த்து விளையாடியவர் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர். பல டென்னிஸ் தொடர்களில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் உலகின் டாப் டென்னிஸ் வீரர்களில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

அவரை எதிர்த்து விளையாடிய சுமித் முதல் சுற்றிலேயே 6-4 என்ற கணக்கில் ரோஜரை வீழ்த்தினார். பார்வையாளர்களுக்கு அவர்கள் கண்களையே நம்ப முடியவில்லை. உடனே உஷாரான ரோஜர் மிகவும் கவனமாக விளையாட தொடங்கினார். இதனால் அடுத்தடுத்த சுற்றுகளில் சுமித்தை வீழ்த்தி ரோஜர் வெற்றிபெற்றார்.

ஆனாலும் நம்பிக்கையிழக்காமல் விளையாடிய சுமித்தின் மன தைரியத்தை பாராட்டிய பலர் தீவிர பயிற்சி செய்தால் சுமித் பின்னாட்களில் சாம்பியன் ஆக கூட வாய்ப்பிருக்கிறது என புகழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்