இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
நேற்றைய இந்தியா - வங்கதேசம் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. ஹிருடாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய தரப்பில், முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து, 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் வழங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் கடைசிவரை அவுட் ஆகாமல் சதம் அடித்து, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 46.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.