நேற்று நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. வெறும் 102 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, மிக எளிதில் பஞ்சாப் அணியை வீழ்த்தியவுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதை அடுத்து, பெங்களூர் அணி வீரர்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது, இந்த போட்டியை நேரில் ரசிக்க வந்திருந்த விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, தனது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் மைதானத்தில் துள்ளிக் குதித்து எழுந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது கண்களில் நெகிழ்ச்சியும் காணப்பட்டது.
விராட் கோலி, அப்போது தனது மனைவியை நோக்கி கையை உயர்த்தி வெற்றியை காண்பித்தார். அதற்கு பதிலாக, அனுஷ்காவும் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2016 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்பதும், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல இன்னொரு வாய்ப்பு பெங்களூர் அணிக்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டிலிருந்து மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போதிலும், பெங்களூர் அணியின் கோப்பை கனவு இன்னும் நிறைவேறாமல் உள்ளது. அந்த கனவு இந்த ஆண்டு நிறைவேறிவிடும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.