கட்டையால் அடித்து... கழுத்தை நெறித்து கணவனை கொலை செய்த மனைவி

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (16:04 IST)
தன் பேச்சைக் கேட்காத கணவனை கட்டையால் அடித்ததோடு, கழுத்தையும் நெறித்து மனைவியே கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் சதாசிவம்(50). அவரின் மனைவி தங்கம்(45). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சதாசிவம் அவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததையும்,  அவரின் காதில் இருந்து ரத்தம் வடிந்ததையும் கண்டு சந்தேகம் அடைந்து இதுபற்றி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். 
 
இதுபற்றிய விசாரணையில் போலீசார் இறங்கிய போது, அவர் கொலை செய்யப்பட்ட அன்று அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே சண்டை நடந்ததாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் கூறினர்.
 
இதைத் தொடர்ந்து போலீசார் அவரின் மனைவி தங்கத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன் கணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். 
 
“நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் என் கணவர், பங்கு சந்தையில் நிறைய பணத்தை முதலீடு செய்திருந்தார். அதில், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதுபற்றி எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட போது அவர் என்னை அடிக்க வந்தார். அப்போது நான் அவரை கட்டையால் அடித்தேன்.  அதில் அவர் மயங்கி விழுந்தார். அதன்பின் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்தேன்” என்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்