தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

Mahendran

திங்கள், 14 ஏப்ரல் 2025 (17:55 IST)
தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் தனது பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நண்பகல் கடந்தும் நமது தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களை புறக்கணித்து வருகிறார்.
 
மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின்"ஆவின்" பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை.ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு, ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?
 
'தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக" என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
 
தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்!இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்