தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சென்னை வந்தார். அவரை அமைச்சர் பொன்முடி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக எம்.பி அப்துல்லா ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்கள் எக்காரணமும் இல்லாமல் எங்கள் தொகுதிகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஒற்றுமையாக நின்று, மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்போம்," என்று உறுதியாக தெரிவித்தார்.
மேலும், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டாட்சி மதிப்புக்காக சிறப்பாக செயற்படுகிறார். இதை நான் பாராட்டுகிறேன். இதுவே ஒரு தொடக்கம். இதை தொடர்ந்து, இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்," என்றார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது வளர்ந்த மாநிலங்களை அநீதி செய்யும் நடவடிக்கையாகும். கல்வி, பொருளாதாரம், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேறிய மாநிலங்கள், "தொகுதிகளை இழக்க வேண்டும்" எனும் எண்ணம் முற்றிலும் தவறு. "நாங்கள் ஒன்றிணைந்து இந்த தவறான திட்டத்தை எதிர்ப்போம். எங்கள் உரிமைகளை காப்போம். எனது மீது எந்த அழுத்தமும் வந்தாலும் நான் அஞ்சமாட்டேன். திஹார் சிறைக்குச் சென்றாலும், எங்கள் மாநில உரிமையை விட மாட்டேன்," என்று அவர் வலியுறுத்தினார்.