பேரறிவாளனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (12:49 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 வருடங்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூன் 11-ஆம் தேதி வேலூர் மத்திய சிறைச்சாலை வாசலில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.


 
 
இந்த பேரணிக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி இந்த பேரணிக்கு ஆதரவளித்துள்ளார்.
 
இது குறித்து பேசிய விஜய் சேதுபதி, பேரறிவாளன் கடந்த 25 வருடங்களாக தனிமை சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவருடைய அம்மா தன் மகனை வெளியே கொண்டு வர போராடி வருகிறார்.
 
இன்று வரை தான் நிரபராதி என பேரறிவாளன் சொல்லி வருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், பேரறிவாளன் நிரபராதி என சொல்லியிருக்கிறார். ஆனாலும் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் ஏன் என்று தெரியவில்லை.
 
25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. பேரறிவாளனை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இதற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார் விஜய் சேதுபதி.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்