அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: வைத்தியலிங்கம் கூறுவது என்ன??

புதன், 17 ஆகஸ்ட் 2022 (14:37 IST)
அதிமுக பொதுக்குழு தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் வரவேற்பு.


அதிமுக கட்சியில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை குறித்த மோதல் எழுந்த நிலையில் கடந்த ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி நீக்கினார். ஆனால் இந்த பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகள்படி நடத்தப்படவில்லை என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அதன் தீர்ப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 11ம் தேதி அதிமுக நடத்திய பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை ஜூன் 23ம் தேதி நிலைமையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், பொதுக்குழு கூட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் தர்மம் வென்றது...  நீதி வென்றது இனிமேல் எல்லாமே எங்களுக்கு தான் வெற்றி என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் வரவேற்பு தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காப்பாற்றப்பட்டுள்ளது எனவும், அதிமுக தொடர்கள் ஜெயலலிதா கொடுத்த மரியாதை நிலைநாட்டப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்