கட்சியை அபகரிக்க நினைப்பவர்களுக்கு இது பாடம்! – ஓ.பன்னீர்செல்வம் மகிழ்ச்சி

புதன், 17 ஆகஸ்ட் 2022 (14:11 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அதை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து ஜூலை 11ல் மீண்டும் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

இதை கொண்டாடும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசியுள்ள ஓ.பன்னீர்செல்வம் “எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக விதிகளை துச்சமாக நினைத்து செயல்படுபவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. கழகத்தின் கசந்த காலங்கள் மாறி இனி வசந்த காலம் வீசும். அதிமுகவை யாரும் அடாவடியாக, சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதி, தர்மம், மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை இந்த தீர்ப்பு மெய்ப்பித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்