அரிவாளை கையில் எடுத்த வைகோ - எதற்கு தெரியுமா?

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (18:21 IST)
கலிங்கப்பட்டியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈடுபட்டுள்ளார். 


 

 
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் மண்ணுக்கு அடியில் உள்ள அனைத்து நீரையும் உறிஞ்சி விடும் எனக் கூறப்படுவதுண்டு. இந்தியாவின் இயற்கை சூழலை அழிப்பதற்காக வெளிநாடுகள் திட்டமிட்டு இந்த மரத்தின் விதைகளை, பல இடங்களை தூவி சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த அரசாங்கமும், இந்த மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்ளவில்லை.  
 
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த கருவேல மரங்களை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின்  மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள கருவேல மரங்களை வருகிற 13ம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து வருகிற 7ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்குமாறு நெல்லை மாவட்ட கலெக்டர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். 
 
எனவே, வைகோ தன்னுடைய ஊரான கலிங்கப்பட்டியில் விவசாயிகள் மற்றும் ஊர்மக்களோடு சேர்ந்து கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒன்று சேர்ந்தது போல், சீமை கருவேல மரங்களையும் அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அடுத்த கட்டுரையில்