அரக்கோணம் இரட்டை கொலை - டிடிவி ஆதங்கம் !

சனி, 10 ஏப்ரல் 2021 (09:02 IST)
அரக்கோணம் இரட்டை கொலை குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கட்சி தொடர்பான வாக்குவாதம் ஒன்றின் பேரில் அரக்கோணத்தை சேர்ந்த அர்ஜுன் மற்றும் சூர்யா என்ற இளைஞர்களை குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. 
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த காவல்துறை இதுவரை 5 பேரை கைது செய்துள்ளது. 
 
இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை உரிய முறையில் நடைபெற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரக்கோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன், சூர்யா என்ற இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
 
பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்தப் பாதகத்தைச் செய்தவர்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய வன்மம் நிறைந்த செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்திட வேண்டியது அவசியம் என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்