காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் காங்கிரஸ் - திமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா, காமராஜருக்கு கருணாநிதி ஏசி அறைகள் ஏற்பாடு செய்து கொடுத்ததாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கூட்டணி கட்சியான காங்கிரஸ் - திமுக இடையே முரண்பாடுகள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்!
பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K