பாலியல் வதை முகாம்களான பள்ளிக்கூடங்கள்! – அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

திங்கள், 7 செப்டம்பர் 2020 (13:41 IST)
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தில் ஆண்டுக்கு 30 ஆயிரத்திற்கும் மேலான குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பதிவாகி வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து மாநில குற்ற ஆவணங்கள் காப்பகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்டுள்ளது. அதில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு வரை குழந்தைகள், மாணவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு சராசரியாக 16 வழக்குகள் வரை பதிவான நிலையில், 2018ம் ஆண்டில் 2,052 வழக்குகளும், 2019ம் ஆண்டில் 2,410 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் ஜூலை வரையிலும் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரசும், பெற்றோர்களும் கவனமுடன் செயல்படவும், நடவடிக்கைகள் எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்