கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் 14 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதாகவும், அவர்களுடைய இரண்டு விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.
மேலும், அவர்களுடைய இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து, அனைவரையும் இலங்கைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீப நாட்களாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.