பாகுபலி பட பாணியில் ஜெயலலிதாவின் சிலை குளறுபடிக்கு பஞ்ச் கொடுத்த டி.ராஜேந்தர்

திங்கள், 26 பிப்ரவரி 2018 (11:17 IST)
ஜெயலலிதாவின் சிலை குளறுபடிக்கு லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் பாகுபலி பட பாணியில் பஞ்ச் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
பாகுபலி படத்தில் பெண்கள் மீது கை வைப்பவர்களை முதலில் வெட்ட வேண்டியது கையை அல்ல, அவர்களின் தலையை என்று அப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ் கூறியிருப்பார். அதேபோல் ஜெயலலிதாவின் உருவ சிலை மாற்றத்திற்கு, முதலில் மாற்றப்பட வேண்டியது ஜெயலலிதாவின் சிலையை அல்ல, சிலை குளறுபடிக்கு காரணமான அக்கட்சியின் அமைச்சர்களைத் தான் என பஞ்ச் கூறியிருக்கிறார் டி.ராஜேந்தர்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்த நாளில் அவருடைய திருவுறுவ சிலை அதிமுக தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை ஜெயலலிதா போன்று இல்லை என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர். நெட்டிசன்களின் கிண்டலை அடுத்து ஜெயலலிதா சிலையின் முக அமைப்பு மாற்றப்படும் என அமைச்சர் ஜெயகுமார் இன்று தெரிவித்தார். 
 
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை மாற்றுவதற்கு முன்பாக, அவருக்கு இப்படி ஒரு சிலையை அமைத்த  ஆட்சியில் உள்ள அமைச்சர்களை மாற்ற வேண்டும். ஜெயலலிதாவின் உருவம், கம்பீரத்தை மறந்து அமைக்கப்பட்டுள்ள அந்த சிலையை பார்க்கவே மனவேதனையாக உள்ளது எனக் கூறினார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்