தந்தை உயிரிழந்த போதிலும் தேர்வு எழுதிய மாணவர்.. தேர்வை முடித்துவிட்டு வந்தபின் ஈமச்சடங்கு..!

Mahendran

வியாழன், 6 மார்ச் 2025 (19:29 IST)
தந்தை உயிரிழந்த நிலையிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவர், தேர்வை முடித்த பிறகு தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பிளஸ் 2 பொதுத்தேர்வு சமீபத்தில் தொடங்கிய நிலையில், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் கதிரவன் இன்று தேர்வுக்கு தயாராக இருந்தார்.
 
அப்போது, திடீரென அவரது தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தந்தை உயிரிழந்த போதிலும், தேர்வை எழுத வேண்டும் என்பதற்காக அவர் பள்ளிக்கு சென்று தேர்வை எழுதி முடித்தார். பின்னர், மீண்டும் வீட்டிற்கு வந்து தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
 
"குழந்தைகளுக்குக் கல்விதான் முக்கியம்" என உயிரிழந்த கதிரவனின் தந்தை கருப்பசாமி கூறுவார் என்றும், அதனால் தான் இந்த சோகத்திலும் அவரது மகன் தேர்வு எழுதி விட்டு, அதன் பிறகு தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
தேர்வு முடிந்தவுடன் உறவினர்கள் அனைவரும் கதிரவனுக்காக காத்திருந்தனர். அவர் வந்ததும் இறுதி சடங்கு தொடங்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்