சீன அதிபர் தங்கவுள்ள ஹோட்டலில் புகுந்த மர்ம நபர்! – போலீஸார் தேடுதல் வேட்டை!

திங்கள், 7 அக்டோபர் 2019 (15:10 IST)
மாமல்லபுரம் வரும் சீன அதிபர் தங்கவுள்ள ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன அதிபர் சின்பிங்கும் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்திக்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 11ம் தேதி சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபர் அங்கிருந்து கார் மூலமாக கிண்டி சென்று அங்குள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் தங்குகிறார். பிறகு அங்கிருந்து மாமல்லபுரம் செல்லும் அதிபர் சுற்றுலா பகுதிகளை பிரதமர் மோடியுடன் சேர்ந்து பார்வையிடுகிறார்.

சீன அதிபரின் வருகையையொட்டி விழா ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீன அதிபர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்குவதற்கு வந்திருக்கிறார். ஆனால் அவரிடம் தேவையான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. போலீஸார் வருவதற்குள் அவர் சென்று விட்டார். இதனால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. அவர் யார் என விசாரிப்பதற்காக போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

சீன அதிபருக்கு எதிராக திபேத்தியர்கள் சிலர் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்