பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய கும்பல்! – கோவையில் பரபரப்பு!

வெள்ளி, 17 ஜூலை 2020 (08:41 IST)
கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம கும்பல் காவி சாயத்தை ஊற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

சமீப காலமாக கடவுள் மறுப்பாளர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் கந்தசஷ்டி கவசம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் கடவுள் மறுப்பு பேசி வரும் திராவிட இயக்கங்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் எழுந்துள்ளது. தமிழகத்தில் மதரீதியான மோதலை ஏற்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து திராவிட கட்சியினர் போராட்டம் செய்ய தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்