பாலிடெக்னிக் கல்லூரிகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்காக ஜூன் / ஜூலை 2025-ல் சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.செழியன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
“தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முக்கியமாக கருதி பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மேன்மை நோக்கில் நான் முதல்வன் திட்டம் மூலம் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற தேர்வுகளில் சில பாடங்களில் தோல்வியடைந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, அவர்களது உயர்கல்வி அல்லது வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க, முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சிறப்பு துணைத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் முழுமையான விவரங்கள் https://dte.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தொடங்கும் நாள்: 18.06.2025
விண்ணப்ப இறுதி நாள்: 23.06.2025 (இரவு 11.59 மணி வரை)
நுழைவுச் சீட்டு பதிவேற்றம்: 25.06.2025
கருத்தியல் தேர்வுகள்: 30.06.2025 – 16.07.2025
செய்முறைத் தேர்வுகள்: 17.07.2025 – 25.07.2025
முடிவுகள் வெளியீடு: 30.07.2025
கட்டண விவரங்கள்:
விண்ணப்பக் கட்டணம்: ரூ.30
ஒரு பாட தேர்வுக்கான கட்டணம்: ரூ.65
மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை சீர்மிகச் செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.