எனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டும்தான் தமிழர்கள்! மற்றவர்களெல்லாம்.. – சீமானின் சர்ச்சை பேச்சு

திங்கள், 7 அக்டோபர் 2019 (13:50 IST)
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் பேசிய சீமான் ‘எனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டும்தான் தமிழர்கள்’ என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அக்டோபர் 21ம் தேதி நடைபெற இருக்கும் சட்ட மன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமி போட்டியிடுகிறார். இதற்காக விக்கிரவாண்டியில் சீமான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் தொண்டர்களிடம் பேசிய சீமான் “வெளி மாநிலத்தவர்கள் எல்லாம் தமிழகம் வந்து தமிழ் கற்று கொண்டு தங்களை தமிழர்கள் என அடையாளப்படுத்தி கொள்கின்றனர். தமிழர்களோ தமிழே சரியாக தெரியாமல் சுற்றி கொண்டிருக்கின்றனர்.” என்று பேசியுள்ளார்.

மேலும் ‘ தமிழ்நாட்டில் முக்கால்வாசிக்கு தமிழர்களே இல்லை. எனக்கு ஓட்டுபோட்ட 17 லட்சம் பேர் மட்டும்தான் தமிழர்கள். மற்றவர்களெல்லாம் தமிங்கலர்கள். இவர்களுக்கு தமிழையே ஆங்கிலத்தில் எழுதினால்தான் புரியும். இவர்களையெல்லாம் கட்டி வைத்து தோலை உரிக்க வேண்டும்’ என பேசியுள்ளார்.

ரஜினியின் அரசியல் குறித்து பேசிய அவர் ”திரைப்படங்களில் வசனம் பேசுவதால் பெரிய அரசியல்வாதியாகிவிட முடியாது. உங்கள் பட வசனங்களை பாகிஸ்தான் எல்லையில் போய் சொல்லுங்களேன். பார்ப்போம்” என கூறியுள்ளார்.

இவரது கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, வன்முறையை தூண்டும்படி இருப்பதாகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்