முன்னாள் முதல்வரின் உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி..! குற்றவாளிகள் 5 பேர் கைது..!!

Senthil Velan

புதன், 14 பிப்ரவரி 2024 (12:57 IST)
ராசிபுரம் அருகே எடப்பாடி பழனிசாமி உதவியாளர் தோட்டத்து வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் அருகயேுள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ்( 32). முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் உதவியாளராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 
 
தற்போது இவர் சேலத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். தோட்டத்து வீட்டில் அவரது தந்தை செல்வகுமார்  (60), தாய் விஜயலட்சுமி(55) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் தோட்டத்து வீட்டில்  அருண்பிரகாஷ் தந்தை செல்வகுமார், தாய் விஜயலட்சுமி, தங்கை  அருள்ரம்யா ஆகியோர்     தூக்கிக்கொண்டிருந்தபோது,  2 கார்களில் 8 பேர் கொண்ட கும்பல் முகத்தை மறைத்தவாறு இரும்பு கடப்பாரை, உருட்டு கட்டைகளுடன் வந்துள்ளனர்.  
 
முன்னதாக கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல், ட்ரோன் கேமரா பயன்படுத்தி வீட்டை நோட்டமிட்டதாகவும் தெரிகிறது. பின்னர் வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமராவை உடைத்துள்ளனர். இரும்பு கேட்கதவு உடைக்கும் சத்தம் கேட்கவே அருள்ரம்யா எழுந்து பார்த்து கூச்சலிட்டுள்ளார். இவரது கூச்சல் சத்தத்தை கேட்ட கும்பல் அங்கு இருந்து வெளியேறி தப்பி ஒடியது. 
 
பின்னர் ஆயில்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளுடன் விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு தென் மாவட்டத்தை சேர்ந்த கும்பலை  இதில் ஈடுபட்டது தெரியவந்தது.
 
இதனையடுத்து தனிப்படையினர்  காரில் சுற்றித்திரந்த 5 பேரை கைது செய்தனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31), சுயம்புலிங்கம் (25), பார்வதிமுத்து (25), ஜெயக்குமார்(24), ஓட்டுனர் முருகானந்தம்(48) உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ALSO READ: தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் - சட்டசபையில் தனி தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!

இவர்களிடம் இருந்து கார், இரும்பு கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய சிலரையும் தேடி வருகின்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்